2006/08/17

இரத்த தான முகாம் - 18 ஆகஸ்ட்

நான் ஏற்கனவே பதிவிட்டிருந்தது போல, துபாயின் 'சென்னை சேரிட்டி' குழு நடத்தும் இரத்த தான முகாம் நாளை காலை 10 மணிக்கு அல் வாசல் மருத்துவமனையில் நடைபெறுகிறது.

விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்களால் முடியாவிடில், தெரிந்தவர்களுக்கும் இச்செய்தியினைத் தெரியப்படுத்துங்கள்.

நன்றி!

2006/08/11

மின்சாரத்தை சேமியுங்கள்!

நமக்கு மின்சாரம் எவ்வளவு இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது என்பது, அது இல்லாமலிருக்கும் நேரத்தில் தான் தெரிகிறது. நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்?

இப்போதெல்லாம் ஆட்டுக்கல், அம்மி போன்ற பொருட்கள் பல வீடுகளில் இருப்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் அதை நமக்கு உபயோகப்படுத்தத் தெரியுமா? (ஆண்களுக்கும் சேர்த்துத் தான், பெண்களுக்கு மட்டுமே என எழுதினால், அதற்கு யாரும் சண்டைக்கு வரக்கூடாது பாருங்கள்?). குளிர் சாதனப்பெட்டிகள் இல்லாத வீடுகள் உண்டா?

இப்படி இன்றியமையாத மின்சாரத்தை நாம் பல வழிகளில் வீணாக்குகிறோம். யாரும் உபயோகப்படுத்தாத நேரத்திலும் பல மின்சாதனங்கள் தேவையில்லாமல் உபயோகத்தில் வைத்து மின்சாரம் வீணாக்கப்படுகிறது.

ஏறக்குறைய எல்லோர் வீட்டிலும் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியில் தான் அதிகமாக மின்சாரம் வீணாக்கப்படுகிறது. இது பலருக்குத் தெரிவதே இல்லை. எப்படி என்று கேட்கிறீர்களா?


இப்போது நீங்கள் வீட்டில் இருந்து இதைப்படிப்பதாக இருந்தால் உடனே நான் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை நீங்களே சோதிக்கலாம்.

குளிர்சாதனப்பெட்டியினைத் திறந்து பாருங்கள். விளக்கு எரிந்து
கொண்டிருக்கும். யாருமே இல்லாத அவ்விடத்தில் எதற்கு விளக்கு?


இதையெல்லாம் யாருமே கவனிப்பதில்லை. என்னமோ போங்க!

2006/08/09

உயிர்காக்க எட்டரை கோடி

உயிரின் விலை குறைந்து விட்டதா என்ற பதிவில், திரு. மனதின் ஓசை அவர்கள் இம்மாதிரி பாதசாரிகள் மரணம் நடப்பதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையா என கேட்டிருந்தார். அதற்கு இப்போது பதில் இப்போது கிடைத்திருக்கிறது.

அரசாங்கம் சுமார் 70 மில்லியன் திர்ராம் செலவு செய்து விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் எல்லாம் பாதசாரிகளுக்கான நடை மேம்பாலத்தைக் கட்டப்போகிறது. இதனால் இம்மாதிரி விபத்துக்களால் இறக்கும் பாதசாரிகளின் விகிதம் சுமார் 40 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2005 ஆம் ஆண்டில் மட்டும் 23 பேர்கள் இம்மாதிரி இறந்து போயிருக்கிறார்கள் ஷேக் சாயது சாலையில் (மொத்தம் 100 பேர்கள் துபாய் முழுவதும்). துபாய் முழுவதும் 17 புதிய பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் கட்டப்போகிறார்கள்.

என்ன தான் புதிது புதிதாக பாலங்கள் கட்டப்பட்டாலும், அதை உபயோகப்படுத்தாமல் சட்டத்தை மீறுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்? அதையும் தடுக்க சாலைகளின் நடுவே தடுப்பு வேலியும் அமைக்கப்போகிறார்கள்.

அதையும் தாண்டிக்குதிக்காமல் இருந்தால் சரி.

2006/08/08

துபாயில் சுடும் சம்பவம்!

உலக நாடுகள் எங்கும் இப்படித்தான் ஒரு பாதுகாப்பே இல்லாமல் இருக்கிறது என்றால், துபாயிலுமா?

பாருங்கள், நேற்று இங்கு ஒரு வீட்டில் நடந்த சுடும் சம்பவத்தை. ஒரே ஒரு முறை சுட்டிருந்தாலும் பரவாயில்லை, இரண்டு முறை சுட்டிருக்கிறார்கள்.

பயன்படுத்திய ஆயுதங்களோ மிக சாதாரணமாக எல்லா இடத்திலும், ஏன் எல்லார் வீட்டிலும் கிடைப்பவைகளாம்.

இளகிய (?) உள்ளம் கொண்டவர்கள் இப்படங்களைப் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சம்பவம் நடந்தது வேறு எங்குமில்லை. எனது வீட்டில் தான்!


முதலில் சுட்டது






இரண்டாவதாக சுட்டது


பார்த்து விட்டு பரிதாபப்படுபவர்கள் தாராளமாக பரிதாபப்படலாம். ஏனெனில் இது நானே சுட்டது.

பார்த்து விட்டு திட்டுகிறவர்கள் தாராளமாக திட்டிவிட்டும் போகலாம்! அடிக்க வருபவர்கள் துபாய் குறுக்குச் சந்து முனையில் நாளை மதியம் 12.00 மணிக்கு 47° C வெயிலில் காத்திருக்கவும்

பி.கு.: தொடர்ந்து சில பதிவுகள் சீரியஸான பதிவுகளாக போய்விட்டதா? அதனால் தான். மூடு மாற்றுவதற்காக!

2006/08/01

நெஞ்சைப்பிழியும் சோகம்

இன்று துபாயின் பத்திரிக்கைகளில் வெளியான ஒரு செய்தி.

32 வயதான ஆரோக்கியசாமி என்னும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு காவலாளி கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். அவர் ஒரு கட்டுமானத் துறையைச் சார்ந்த அலுவலகத்தின் இயந்திரக்கிடங்கில் காவலாளியாக வேலையில் இருந்த போது, இயந்திரங்களத் திருட வந்த யாரோ இவரைக் கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 6 வருடங்களாக இவர் இங்கு வேலை செய்து வருகிறாராம். அடுத்த மாதம் விடுமுறைக்குச் செல்வதாக ஆவலுடன் இருந்திருக்கிறார். பாவம். ஆனால், விடுமுறைக்குச் செல்ல மிக்க ஆவலுடன் எதற்காக இருந்திருக்கிறார் என கேட்கும் போது தான் மனம் வேதனைப்படுகிறது. தனது மனைவியையும், பிறந்தது முதல் பார்த்திராத தனது ஒரு வயது மகனையும் பார்க்க இருந்திருக்கிறார். இதைப்படிக்கும் நமக்கே இப்படி இருக்கிறதே, அவரது மனைவியின் நிலமை?

சமீபத்தில் பக்ரைனில் நடந்த தீ விபத்தில் இறந்த 16 பேரின் சோகக் கதை அணையும் முன், இப்படி இன்னுமொரு செய்தி.

கடல் கடந்து பெரும் கனவுகளுடன் வந்த இவர்களின் உயிர் இப்படி அனாவசியமாக போவது பரிதாபத்திற்குரியது.

அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்திற்கு வேண்டிய பலத்தைத் தரவும் ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக!