2006/06/12

அமீரகவாசிகளுக்கு ஒரு வேண்டுகோள்

இரத்த தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வு நமது வலைப்பூ நண்பர்களுக்கு நிறையவே உண்டு என எண்ணுகிறேன். திரு. யாத்ரீகன் தனது இப்பதிவில் எழுதியிருப்பது ஒரு உதாரணம். (மற்றவர்கள் எழுதிப் படித்திருக்கிறேன், ஆனால் நினைவிலில்லை).

பதிவிற்குண்டான விஷயத்திற்கு வரும் முன், அமீரகத்தில் இருக்கும் இரத்த தானம் பற்றிய சில விவரங்களைத் தர விரும்புகிறேன் (மற்ற வலைப்பதிவாளர்களுக்காக!).

இங்கு அரசாங்க மருத்துவ மனைகளில் இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்ய வருபவரின் இரத்தம் முதலில் பரிசோதிக்கப்படுகிறது (முக்கியமாக எய்ட்ஸ் மற்றும் அவரது இரும்புச்சத்து அளவு). அவைகள் ஒத்துப்போனால் இரத்தம் அவரிடமிருந்து பெறப்படுகிறது.

மேலும் சில நேரங்களில், இரத்த வங்கியின் இருப்பு குறைவாகும் போது சில அலுவலகங்களுக்கு (என்னுடைய அலுவலகம் அதில் ஒன்று) சென்றும் இரத்தம் சேகரிக்கப்படும்.

இவ்வாறு சேகரிக்கப்படும் இரத்தத்தினை அவர்கள் இலவசமாக எடுத்துக்கொள்வதில்லை. தி. 200 கொடுப்பார்கள்.

முதல் இரண்டு தடவை தானம் செய்யும் போது இப்பணம் கொடுக்கப்பட மாட்டாது. மூன்றாவது தடவையாக கொடுக்கும் போது மட்டுமே தரப்படுகிறது. முன்பு இரண்டாவது தடவையே தரப்பட்ட பணம், இப்போதெல்லாம் மூன்றாவது தடவையாக கொடுக்கும்போது மட்டுமே தரப்படுகிறது. காரணம் சில பேர் 'பணத்திற்காக' மட்டுமே கொடுக்கிறார்கள் என்பதால்!

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். எனக்குத் தெரிந்த ஒரு அமைப்பு (சென்னை சேரிட்டி) இம்மாதிரியான இரத்த தானங்களை ஒருங்கினைத்து மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை அரசாங்க மருத்துவமனையில் நடத்துகிறது. இம்முகாமில் கலந்து கொண்டு இரத்தம் கொடுப்பவர்களிடம் இருந்து பெறும் பணத்தினை சேகரித்து சென்னையில் இருக்கும் அநாதை ஆஸ்ரமங்களுக்கும் மற்ற அமைப்புகளுக்கும் அனுப்பி வருகிறது இவ்வமைப்பு.

இதில் இரண்டு நல்ல விஷயங்கள். ஒன்று கொடுத்த இரத்தம் இங்கே தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறது. அதில் கிடைக்கும் பணம், பல நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுகிறது.

இதில் நானும் இதுவரை 4 தடவை பங்கு பெற்றிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் சொல்லிக்கொள்கிறேன். போன தடவை ஒரு லாரி ஓட்டுநரை அம்முகாமில் சந்தித்தேன் (அவரது சம்பளம் மாதம் தி. 600 மட்டுமே!). அவர் இது வரை தன் வாழ்நாளில் 200 தடவை இரத்தம் அளித்திருக்கிறாராம் (இந்தியாவில் இருந்தே அவர் ஆரம்பிது விட்டார்). அவருக்கு முன்னால் நான் அளித்திருக்கும் தானங்கள் ஒன்றுமே இல்லை!

இங்கிருக்கும் சிலருக்கு ஒரு மனநிலை, அதாவது அவர்களுடைய இரத்தம் வெளிநாட்டினருக்கு எல்லாம் உபயோகப்படக்கூடாதாம்! இந்தியருக்குத் தான் கொடுப்பார்களாம்! உயிரில் கூட தேசியம் பார்க்கிறார்கள் - நொண்டிச்சாக்கு! அப்படி நினைக்கும் நபர்கள் கூட இம்முகாமில் பங்கு பெற்றால், அப்பணத்தினை நமது தாய்நாட்டில் வாடும் சில அநாதைகளுக்காக உபயோகப்படுத்தலாமே? இவர்களுக்கு மற்றுமொரு தூண்டுகோலும் இருக்கிறது - இவர்களுடைய உடல் இருக்கும் நிலையை உங்கள் இரத்த்தினை சோதிப்பதன் மூலம் நீங்கள் இலவசமாக அறிந்துகொள்ளலாம்.

அமீரக வலைப்பூ அன்பர்களுக்கு எனது வேண்டுகோள் - உங்களுக்கு விருப்பம் இருந்தால், இந்த முகாமில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே. உங்களுக்கும் நொண்டிச்சாக்கு சொல்லும் தெரிந்தவர்கள் இருந்தால், அவர்களுக்கு இதன் பயன்களைச்சொல்லி அவர்களையும் பங்கு பெற வைக்க வேண்டும்.

இம்மாதிரியான அடுத்த முகாம் இன்னும் ஒரு மாதத்தில் நடக்கவிருக்கிறது. விருப்பம் உள்ள நண்பர்கள் தனது விருப்பத்தினை திரு. இரவிச்சந்திரன் அவரகளுக்கு உங்களுடைய தொலைபேசி எண்ணுடன் மடல் அனுப்பி தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பின்னூட்டமாகவும் அனுப்பலாம்.

நன்றி!

4 Comments:

At 12:59 PM, June 12, 2006, Blogger Unknown said...

முதல் முதலாக தனது விருப்பத்தினைத் தெரிவித்திருக்கும் திரு. முத்துக்குமரனுக்கு நன்றி.

உங்கள் கைத்தொலைபேசி எண் இருப்பதால், உங்கள் பின்னூட்டத்தினை வெளியிடாமல் உள்ளேன்!

 
At 12:59 PM, June 12, 2006, Blogger பரஞ்சோதி said...

அருமையான பணி.

வாழ்த்துகள் நண்பரே!

உங்க பதிவால் மேலும் பலர் பயனடைய வாய்ப்பு இருக்கிறது, தொடரட்டும் உங்கள் சேவை.

 
At 1:02 PM, June 12, 2006, Blogger Unknown said...

நன்றி பரஞ்சோதி அவர்களே.

 
At 10:08 AM, June 15, 2006, Blogger Unknown said...

மறுபடியும் தமிழ்மணத்தின் முகப்பில் வரவைக்க மறுமுயற்சி. இப்பதிவினை நிறைய அமீரகவாசிகள் பார்த்ததாக தெரியவில்லை! எனவெ......

 

Post a Comment

<< Home