2006/02/28

எங்கே போகிறோம்?

நான் துபாய் வந்து 7 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டன. வந்த புதிதில் எதுவுமே பிடிக்காமல் தான் இருந்தது, வழக்கமான 'மேல்நாட்டு வாழ் இந்தியர்கள் போல'.

அங்கே இருந்த போது தெரியாத பலரின் அருமை பெருமைகள் இங்கே வந்தபின் தெரிய ஆரம்பித்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!

அதனால் எல்லோருக்கும் கடிதம் எழுத ஆரம்பித்தேன். தனியாக இருக்கும் போது பொழுதை கழிக்க இதைத்தவிர நல்ல வேலை இருக்க முடியுமா? 10 கடிதம் போட்டால், பதில் வருவது ஒன்று அல்லது இரண்டு தான் இருக்கும் (வீட்டுக்காரம்மா இதுலே அடக்கம் இல்லே). அந்த ஒன்றுக்கு பதில் போட்டால், அதுவும் திரும்ப வருவது மிகவும் அரிது (இல்லையென்றே சொல்லலாம்).

இணையம் வளர ஆரம்பித்த பின் (அல்லது இணையத்தைப் பற்றி எனக்கு தெரிய ஆரம்பித்த பின்) அதன் மூலம் தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன். இதில் அவ்வளவு மோசமான முடிவு இல்லை. அவ்வப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது பதில் வந்து விடும். பெரும்பாலும், அலுவலகத்திலிருந்து பல பேருக்கு அனுப்ப பலருக்கு முடியும் என்பதால்.

முடியாதவர்களை குறை சொல்லவும் முடியாது. ஏனெனில், வெளியே சென்று வேலை மெனக்கெட்டு இணையத்திற்காக பணம் செலவு செய்து எனக்கு பதில் அனுப்ப நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா என நினைத்துக்கொள்வேன்.

சிலர் அதையும் ஒழுங்காக கடைப்பிடிக்காமல் போனதால், தொலைபேசி மூலம் அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசுவேன். வெளிநாட்டில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும், வெளிநாட்டில் எல்லாம் இலவச தொலைபேசி இல்லையென. உண்மையில், இப்போதெல்லாம் இந்தியாவில் இருந்து பேசினால் தான் கட்டணம் மிகவும் குறைவு. அதெல்லாம் அவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முற்படுவது, செவிடன் காதில் சங்கூதுவது போல. வெளிநாட்டில் தான் பணம் மரத்தில் காய்க்கிறதே?

சரி. சொல்ல வந்ததை சொல்லாமல், எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். விஷயத்திற்கு வருகிறேன்.

சமீபத்தில் கல்லூரியில் என்னோடு படித்த ஒரு நண்பனுக்கு (SS என வைத்துக்கொள்வோம்) தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவன், நான் மற்றும் இன்னொரு நண்பன் (KK) மூவரும் ஒரு அணியாக கல்லூரியில் இருந்தோம். சென்னைக்கு செல்லும்போதெல்லாம் மூவரும் சந்திப்பதுண்டு.

நலம் விசாரிக்கும்போது அவனிடம் KK பற்றி விசாரித்தேன். அதற்கு SS சொன்ன பதில் தான் இந்தப்பதிவை எழுதத்தூண்டியது.

அவன் (SS) சொன்னான், KKவிடம் அவனே பேசி மாசக்கணக்கில் ஆகிறது என்று. நான் துபாயில் இருப்பதும், அவன் சென்னையில் இருப்பதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் என்று. எனக்கு ஒரே அதிர்ச்சி / ஆச்சரியம். அவனிடம் சொன்னேன், நான் KKவை மிகவும் விசாரித்ததாக அழைத்து சொல்லு, என்னைக் காரணம் வைத்தாவது நீ அவனிடம் பேசு என்று.

இது ஒரு சிறிய உதாரணம் தான். எத்தனையோ நண்பர்களை (மற்றும் சில சொந்தங்களையும்) இந்த மாதிரி 'இரு வழி' தொடர்பு இல்லாமல் நான் இழந்திருக்கிறேன். நான் தான் ஊரைவிட்டு இங்கே வந்தேன், அதனால் அப்படி நிகழ்ந்தது என்றால், ஒரே ஊரில் இருந்து கொண்டு மாதக்கணக்கில் பேசிக்கொள்ளாமல் (சந்திப்பு 2வது விஷயம்) இருப்பது சரியா?

நம்மில் எத்தனையோ பேர் சொந்த வேலைகளில் மூழ்கி பல உறவுகளையும், நண்பர்களையும் இழந்து விடுகிறோம். தொடர்பு கொள்ள எத்தனையோ வழிகள் இந்த கலியுகத்தில் - அப்படி இருந்தும்? ஒரு சிறிய 1 மணித்துளி தொலைபேசி அழைப்பு? ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை (இங்கே வெள்ளிக்கிழமை)யில் ஒரு சந்திப்பு என இருந்தால், இப்படி இழக்க நேரிடாது.

ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கிறோம், கடைசியில் தனிமையாக உணரும்போது இதையெல்லாம் நினைத்து வருத்தப்பட நேரிடும். உணர்வோமா?

2006/02/27

சில நேரங்களில் சில கேள்விகள்

சில சமயத்திலே எதிர்பாராம ஒருத்தரை சந்திக்கும் போது, நம்ம மக்கள் இருக்காங்களே, எதுவோ கேட்கனுமேனு சில கேள்விகள் கேட்பாங்க பாருங்க, அது அசட்டுத்தனமான கேள்வின்னு தெரிஞ்சும்? கண்டிப்பா எல்லோருக்கும் அந்த அனுபவம் இருக்கும் (சொல்லியோ அல்லது கேட்டோ).

வேறு வழியில்லாம கேட்க வேண்டி இருக்கும் போது உங்களுக்குள்ளே சில பதில் சொல்லத் தோணி இருக்கா இல்லையா? அதிலே சில உதாரணங்கள் தான் கீழே! படிச்சிப் பார்த்துட்டு வேற ஏதாவது இன்னும் இருந்தா அல்லது அனுபவிச்சி இருந்தா எடுத்து விடுங்க!

(கலரில் இருப்பவை நாம் திருப்பி சொல்ல நினைத்தது)

சினிமா தியேட்டரில்:
யேய், இங்கே என்ன செய்யறே

சும்மா சினிமா பார்க்க வந்தேன்
உனக்கு தெரியாதா? இங்கே தியேட்டரில் பிளாக்லே டிக்கெட் விற்கிறேனே?

பேருந்தில்: நல்ல கட்டை வைத்த காலணியைப்போட்டு யார் காலையாவது மிதித்து விட்டு
ஸாரி, வலிக்கிறதா?
இல்லைங்க, பரவாயில்லை.
வலிக்கவே இல்லையே? நான் தான் அனஸ்தீஸியா போட்டுட்டு வந்திருக்கேனே, இன்னோரு தடவை மிதிக்கிறீங்களா?

இறுதிச்சடங்கில்:
எத்தனையோ பேரு இருக்கும் போது இவர் மட்டும், சே...
ஆமாங்க பாவம்.
ஏன், நீங்க போயிருக்காலம்னு சொல்றீங்களா?

உணவு விடுதியில்:
சர்வர், இந்த டிஷ் எப்படி இருக்கும்?
ரொம்ப நல்லா இருக்கும் சார்.
அதுவா, ரொம்ப மோசம் சார். எல்லாம் கலப்படத்திலே செஞ்சது. அப்பப்போ நாங்க எல்லாம் எச்சி கூட துப்புவோமே?

குடும்ப விழாவில், நெடுநாள் கழித்து பார்க்கும் அத்தை
டேய், எவ்வளோ பெருசா வளர்ந்துட்டே நீ?
ஆமாம் அத்தை.
ஆமா, ஆனா நீங்களும் ஒன்னும் சுருங்கி எல்லாம் போகலை.

கல்யாணத்தில், மணப்பெண்ணைப் பார்த்து
இந்தப்பையன் எப்படி? நல்ல பையன் தானே?
ஆமாம், ரொம்ப ரொம்ப நல்லவரு.
அவன் ரொம்ப மோசமானவன் தான், ஆனா நிறையப் பணம் வைச்சிருக்கான்னு தான் அவனை கட்டிக்கறேன்.

நடுராத்திரியில் 1 மணிக்கு, தூங்கிக்கொண்டிருக்கும் போது போன் அடித்து,
ஸாரி, தூங்கிட்டு இருந்தியா?
இல்லை பரவாயில்லை, சொல்லு.
தூக்கம் வரலே, அதான் கொசு கிட்டே அதோட வாழ்கையைப் பற்றி பேசிகிட்டு இருந்தேன்.

யாராவது முடி வெட்டிக்கொண்டு வருபவரை (அல்லது வருபவளை) பார்த்து:
என்ன முடி வெட்டிகிட்டியா?
ஆமா, நல்லா இல்லை?
இல்லையே, இது இலையுதிர்காலம் இல்லையா, அதான் தானா உதிருது.

பல் மருத்துவர் உங்கள் வாயில் கூரான ஆயுதத்தை வைத்துக்கொண்டு
வலிச்சா சொல்லுங்க, என்ன?
சரிங்க டாக்டர்.
வலிக்காது டாக்டர் - கொஞ்சூண்டு ரத்தம் மட்டும் தான் வரும்.

நீங்கள் சிகரெட் பிடிப்பவர் என்று தெரியாத உங்கள் 'மனம் கவர்ந்த' பெண்,
ஏய், நீ சிகரெட் பிடிப்பியா?
@#&(*%^
என்ன ஒரு அதிசயம் பாரேன், சாக்கை வாயிலே வைச்சிகிட்டு இருந்தேன், அதுவா தீப்பிடிச்சி எரிஞ்சிகிட்டு இருக்கு இப்போ?

2006/02/26

நட்பு, காதல் & கல்யாணம்

நட்பு:

நீயும் நானும் நண்பர்கள்,
நீ அழுதால் நானும் அழுவேன்,
நீ சண்டையிட்டால் நானும் சண்டையிடுவேன்,
நீ காயப்பட்டால், நானும் காயப்படுவேன்
நீ மலையிலிருந்து குதித்தால்................

நீ இல்லாமல் நான் இனிமேல் எப்படி இருப்பேனோ?


காதல்:

காதல் என்பது ரஜினி மாதிரி
அது எப்போ வரும், எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது!
ஆனா, வர வேண்டிய நேரத்துக்கு சரியா வந்துடும்.


கல்யாணம்:

கல்யாணம் என்பது சத்யராஜ் மாதிரி
அது கேரக்டரையே யாரும் புரிஞ்சிக்க முடியாது!


டிஸ்கி: இவையெல்லாம் எனது சொந்த சரக்குகள் அல்லை, மெயில்களில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவைகள்

2006/02/23

படம் காட்டுதல்

சாப்பிடத் தோன்றுகிறதா அல்லது ரசிக்கத் தோன்றுகிறதா?




















இரண்டு பங்கு வோட்கா + 1 பங்கு எலுமிச்சை

உன்னைத் தவிர நான் யாரையும் காதலிக்க முடியாது
என நினைத்திருந்தேன்,
உன் தங்கையைப் பார்க்கும் வரை!

ரோஜாக்கள் சிவப்பு, சர்க்கரை இனிப்பு - உன்னைப்போலவே,
ரோஜாக்கள் உதிர்கின்றன,
சர்க்கரைக் கிண்ணம் காலி - உன் மண்டையைப்போலவே!

கனிவு, புத்திசாலித்தனம்
இவை எல்லாமே உன்னை பிரதிபலிக்கின்றன,
எதிர்மாறாக!

உன்னைப் பற்றி எல்லாமே எனக்கு பிடிக்கும்,
உன்னுடைய புன்னகை, உன் முகம், உன் கண்கள்,
சே, உன்னால் நான் என்னவெல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது?

உன் முகத்தைப் பார்க்கும் போது தான் எனக்கு எல்லாக் கனவுகளும் தோன்றுகின்றன,
அதனால் தான், நான் பேய்க் கனவு கண்டது போல் அலறிக்கொண்டு எழுந்திருக்கிறேன்.

இந்த மாதிரி கவிதை எழுதத் தேவை = தலைப்பைப் பார்க்கவும்!

2006/02/22

நாலு பேருக்கு நன்றி - சங்கிலிப்பதிவு

Four jobs I have had:

தட்டச்சாளர் (Typist)
சுருக்கெழுத்தர் (Stenographer)
காரியதரிசி (Secretary)
தனி உதவியாளர் (PA)

Four movies I would watch over and over again:

அன்பே வா
ஆயிரத்தில் ஒருவன்
காதலிக்க நேரமில்லை
காசே தான் கடவுளடா

Four places I have lived (for years):

அம்பாசமுத்திரம்
சென்னை - புதுப்பேட்டை
சென்னை - வில்லிவாக்கம்
துபாய்

Four TV shows I love to watch:

டாம் & ஜெர்ரி கார்டூன்

மீண்டும் மீண்டும் சிரிப்பு

கிரிக்கெட் சம்பந்தமான எதுவும்

அனிமல் பிளானட்

Four places I have been on vacation:

கன்யாகுமரி

ஊட்டி

சிங்கப்பூர்

மலேசியா


Four of my favourite foods:

சாம்பார்
மீன் குழம்பு (குழம்பு மட்டும்)
மோர் சாதம்
அம்மாவின் தக்காளி சாதம்

Four places I'd rather be now:

புதுப்பேட்டை வீட்டு மொட்டை மாடி - இரவில் தனியாக
வில்லிவாக்கம் கிரிக்கெட் மைதானம்
ஸ்விட்சர்லாந்து (நெடுநாளைய கனவு)
பள்ளி/கல்லூரி வகுப்பறை

Four sites I visit daily:

cricinfo.com
The Hindu
Tamizhmanam
Thenkoodu

Four People I would like to tag:

பெனாத்தல்கள்
இட்லி வடை
பாஸ்டன் பாலா
Agent 8860336 ஞான்ஸ் (என்னை இப்படி இதில் மாட்டி விட்டவர் - அதான் கடைசியில் ;)

கல்யாணம் ஆன பிரம்மச்சாரிகள்

இன்று அபுதாபியிலிருந்து ஒரு பனி சம்பந்தப்பட்ட செய்தி. துபாய் பனி ரசிக்கத்தக்கது, ஆனால் இதுவோ எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை. முக்கியமாக 'முன்பே சமைக்கப்பட்டு' கிடைக்கும் திடீர் உணவு சாப்பிட்டு அவசர வாழ்கையில் வாழும் மக்களுக்கு.

இந்த மாதிரி உறைய வைக்கப்பட்டு கிடைக்கும் 'திடீர் உணவு' வகைகளை ஒரு இந்தியர் (அதுவும் தமிழ்நாட்டுக்காரர்) ஒரு வருடமாக சாப்பிட்டு வந்திருக்கிறார். வெளிநாட்டில் வசிக்கும் எத்தனையோ 'கல்யாணம்' ஆன பிரம்மச்சாரிகளைப் போல (அப்பாடி, தலைப்பை ஒரு தடவையாவது உபயோகப்படுத்தியாகி விட்டேன்).

ஒரு மாதத்திற்கு 50 பாக்கெட்டுகள் வரை வாங்குவாராம். வேலை நிமித்தமாக ஊர் ஊராக சுற்றும் வேலை (உள்நாட்டிலேயே தான்). சிறிது நாட்களுக்குப் பிறகு தனது கால்கள் மற்றும் கைகள் மரத்துப்போன உணர்வு அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. முதலில் வேலைப்பளு காரணமாகத் தான் இப்படி இருக்கிறது என் நினைத்து வலி நிவாரிணிகளை சாப்பிட்டு இருக்கிறார். அப்புறம் நடக்கவோ நிற்கவோ கூட முடியாத நிலை வந்தவுடன் தான் (நம்ம போலத்தான் எல்லாரும் இருக்காங்க), எங்கேயோ பிரச்சினை என சந்தேகித்து மருத்துவமனையை அனுகிகியிருக்கிறார்.

முதலில் அவருடைய கால் நரம்பில்தான் ஏதோ பிரச்சினை என நினைத்த மருத்துவர்கள், பல விதமான பரிசோதனைகளுக்குப் பிறகு தான் உண்மையான நிலையை கண்டறிந்துள்ளனர்.

என்ன பிரச்சினை தெரியுமா? விட்டமின் B12 மிகக்குறைவாக உள்ளதே இதற்குக் காரணமாம். ஏனெனில், அவர் சாப்பிட்டு வந்த உறைய வைக்கப்பட்ட உணவுகளில் பதப்ப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட இரசாயனங்கள், அவரது உடம்பில் உள்ள B12 விட்டமினை கிரகிக்கும் செல்களை அழித்துவிட்டன. இதனால் தான் அவரது உடம்பில் சிறிது சிறிதாக விட்டமின் B12 குறைவு ஏற்பட்டு, இந்த நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பொதுவாக குடிப்பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இந்தக் குறைபாடு எற்படுமாம்.

இப்போது அவர் வாரத்திற்கு ஒருமுறை B12 ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நிலமை.

இப்போதெல்லாம் அவர் இந்த உணவு வகைகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

நீங்கள் சாபிடுபவர் என்றால், எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?

2006/02/21

துபாயில் பனி

என்ன நம்ப முடியவில்லையா? உண்மை. ஆனால், இயற்கையான பனியல்ல. செயற்கையான பனி.



துபாயில் சுற்றுலாப்பயணிகளை வரவைக்க நடக்கும் எத்தனையோ முயற்சிகளில் இதுவும் ஒன்று. சுற்றுலா இப்போது இவர்களுக்கு நிறைய வருமானத்தினை அளிக்க ஆரம்பித்து விட்டதால், இவர்களும் பணத்தினை தண்ணீராய் (அல்லது பனியாய்?) செலவழித்து உருவாக்கியிருப்பது தான் இந்தப் பனிச்சறுக்கு விளையாட்டு இடம்.



இது நகர மையத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்த நாட்டின் மிகப்பெரிய ஷாப்பிங் நிலையம் (Mall of the Emirates) கட்டப்பட்ட போது அதை ஒட்டி இதுவும் கட்டப்பட்டது.



இது தான் உலகத்திலேயே மிகப்பெரிய உள்ளரங்குப் பனிச் சறுக்கு மையமாகும். இதன் பரப்பளவு சுமார் 3 கால்பந்தாட்டக் களங்களுக்கு இணையாகும். சுமார் 25 மாடி உயர அளவுக்கு இருக்கும் இது, ஒரு சாய்வான உலோக குழாய் உள்ளே கட்டப்பட்டு இருக்கிறது.



இதன் உள்ளே சென்று பனிச்சறுக்கு விளையாட, நல்ல அனுபவமுள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள், அதுவும் பரிசோதனை செய்த பிறகே. தெரியாத ஆட்களுக்கு (என்னைப் போன்ற) விளையாட நிறைய இருக்கிறது.



இதன் அனுமதிக்கட்டணம் 100 திர்ராம் (சுமார் 1200 ரூ அல்லது 35 $). குளிரை சமாளிக்கத் தேவையான எல்லா உடைகளும் இதில் அடங்கும். சிறு குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் நிறைய சறுக்குப் பாதைகள் எல்லாம் அமைக்கப்பட்டு இருக்கின்றன.



இந்த பனிச் சறுக்கு மையத்தில் ஆண்டு முழுவதும் பனி இருக்கும். இதை அவர்கள் உறை நிலையில் வெப்பதினை குளிர் சாதனங்களின் உதவியால் கட்டுப்படுத்தி, அதிக அழுத்தத்தில் தண்ணீரைப் பீய்ச்சி, பனியை உறுவாக்குகிறார்கள். பனி உருகுவதால் வரும் தண்ணீரை, செடி மற்றும் புல்வெளிக்கு பாசனத்திற்காக பயன்படுத்துகிறார்கள். ஏற்படும் குளிர் காற்றும் பக்கத்திலுள்ள ஷாப்பிங் நிலையத்தினை குளிர்விக்க பயன்படுகிறது.

இங்கு சென்று வெளியிலிருந்து ஒரு முறை பார்த்திருக்கிறேன். அந்த இடத்தின் மிகப்பெரிய கவர்ச்சியே இதுதான். செய்தித்தாளில் இதன் பாதுகாப்பு அம்சங்களின் ஓட்டை பற்றி சில செய்திகள் வந்தாலும் கூட்டத்திற்கு குறைவில்லை. (வெளிப்புற கண்ணாடியில் பெரிய விரிசலை நானும் பார்த்தேன்).


துபாயில் நடக்கும் டென்னிஸ் போட்டிக்கு வந்து இருக்கும் ஷெரபோவா, டேவன்போர்ட் ஆகியோரை இவர்கள் அங்கு வரவழைத்து விளம்பரம் வேறு தேடிக்கொண்டு இருக்கின்றனர். விளம்பரம் இல்லாமலேயே இது நன்றாக பிரபலாமாக வாய்ப்பு நிறையவே இருக்கிறது.
(சானியா ரசிகர்களுக்கு - அவர் இன்னும் துபாய் வந்து சேரவில்லை. பெங்களூர் பந்தயத்தில் இறுதிப்போட்டியில் விளையாடியதால்).




யாராவது வருகிறீர்களா, பாலைவனத்தின் நடுவே பனி பார்க்க?

2006/02/20

ராகுல் டிராவிடின் சாணக்கியம்!

எதிர் பார்த்தை விட மிக எளிதாக வெற்றி பெற்றது இந்தியா. டிராவிடின் மிக சமயோஜிதமான வழிநடத்தல் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

முத்து எழுதியுள்ள இந்தப் பதிவில், ராகுல் டிராவிட் பற்றி எழுதியுள்ளார்.

டிராவிடின் முக்கியமான மற்றுமொரு பாராட்டத்தக்க விஷயம் ஒன்று உள்ளது. பரிசளிப்பு முடிந்தவுடன் கொடுத்த பேட்டியில், தனது அணியை அவர் பாராட்டிய விதமும், தனது பயிற்சியாளர் மற்றும் மேலாளர் அனைவரின் பங்கையும் மறக்காமல் குறிப்பிட்ட விதமும் மிகவும் பாராட்டத்தக்கது. அது மட்டுமல்லாமல், கங்குலி கூட செய்யாத ஒரு விஷயம் டிராவிட் செய்தார்.

இந்த மொத்தத் தொடரும் ஒரு 'நல்லிணக்கத் தொடர்' என்றே அழைக்கப்பட்டு வந்தது. அதற்கான முத்திரையை ராகுல் தனது பேச்சின் மூலம் வைத்தார்.

பாகிஸ்தான் அணிக்கு விளையாடிய விதத்திற்காகவும் மற்றும் விருந்தோன்மைக்காகவும், பாக் மக்களுக்கு வரவேற்பு மற்றும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் பேட்டியளித்தது அவர் எவ்வளவு புத்திசாலியான தலைவராக உறுவாகிவருகிறார் என்பதையே காட்டுகிறது.

ஆட்டத்தில் மட்டுமல்ல, இதிலும் இன்சமாமை டிராவிட் வீழ்த்திவிட்டார்!

Well Done Dravid!

2006/02/19

தேனியா தேளா?

நேற்று தங்க வேட்டை நிகழ்ச்சியை வழக்கம் போல பார்த்தேன். அதில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று நான் படித்த விஷயத்தினைப்பற்றியது.

கேள்வி இதுதான். வால்பாகத்தில் கொடுக்கு உள்ளது எது? கொடுக்கப்பட்ட பதில்கள்: சிலந்தி, தேள், தேனி மற்றும் ஒரு பூச்சி. சரியான பதில் இதில் தேள் என சொல்லப்பட்டது. சரியான விடையே, ஆனாலும் தேனிக்கும் வால் பாகத்தில் தான் கொடுக்கு உள்ளது. எனவே தேனி என்று பதில் சொன்னாலும் அதுவும் சரியான பதில் தான். இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? கண்டிப்பாக கேள்வி தயாரித்தவருக்கு தெரியவில்லை.


தேனீக்களைப்பற்றிய சில உண்மைகள்

தேனீக்கள் கிட்டத்தட்ட 100 மில்லியன் ஆண்டுகளாக இவ்வுலகத்தில் இருந்து வருகின்றன. குளிர் காலத்தில் பூக்கள் பூக்காத போது அவைகள் தனது உணவுக்காக வேண்டி சேமித்து வைப்பதே தேன் ஆகும்.

எறும்புகளைப்போலவே தேனீக்களும் சமுதாயமாக வாழ்கின்றன. அவைகளில் ராணி, ஆண் மற்றும் வேலைக்காரர்கள் உண்டு.

ராணித்தேனி தான் மிகவும் பெரிய ஈ. அது இரண்டரை நாள் லார்வாவாக இருக்கும்போதே தெரிவு செய்யப்பட்டு கவனமாக வளர்க்கப்படுகிறது. 11 நாட்களுக்கப்புறம் அது வெளிவந்து சுமார் 18 ஆண் ஈக்களுடன் கூடி இனவிருத்தியில் ஈடுபடும். அந்த சமயத்தில் தனது வாழ்நாளுக்குத் தேவையான பல மில்லியன் விந்தணுக்க்களை சேமித்து வைத்துக்கொண்டு விடும்.

ஆண் ஈக்களின் வேலை இதைத்தவிர வேறு ஒன்றுமேயில்லை. சில சமயம் காலனியில் உணவு பற்றாக்குறையிருப்பின் இவை கூட்டிலிருந்து வெளியேற்றப்படுவது கூட உண்டு.

வேலைக்கார ஈக்கள் தான் கூட்டின் முதுகெலும்புகள் மாதிரி. இவையனைத்தும் பெண்களே, ஆனால் முட்டையிட முடியாத பெண் பூச்சிகள். 50,000 முதல் 60,000 வரையிலும் இதன் எண்ணிக்கை இருக்கும்.

இதன் வாழ்நாள் காலத்திற்கேற்றபடி மாறுபடுவதுண்டு. பொதுவாக 28 முதல் 35 நாள் வரை வாழும் இவைகள், சில சமயம் முழு குளிர்காலமும் வாழுவதுண்டு.

இவைகள் தான் ராணிக்கும் மற்ற லார்வாக்களுக்கும் உணவு கொண்டு வருகின்றன. காவல் காக்கின்றன. இவ்வளவு ஏன்? தனது இறக்கைகளால் கூட்டை குளிர்விக்கின்றன.

முக்கியமான ஒன்றான தேனை, இவைகள் மலர்களிலிருந்து எடுக்கும் மதுவிலிருந்து தயாரிக்கின்றன. மதுவை இந்த ஈக்கள் தனது வயிற்றில் சேமித்து வருகின்றன. கொண்டுவரப்படும் மதுவானது ஒவ்வொரு சிறிய அறைகளிலும் சேர்க்கபடுகிறது. சேர்க்கப்பட்ட திரவமானது ஈக்களால் ஈரப்பதம் போகவைப்பதற்காக ஆற்றப்படுகின்றன - இறக்கைகளால். இந்தத் திரவம் தான் தேன் - இதில் 80% தண்ணீர் மற்றும் தேன், 19% தண்ணீர்.

கதை எல்லாம் போதும் - கொட்டுவது எப்படி என்கிறீர்களா? நான் கொட்டு வாங்கியது இல்லை. யாராவது பாக்கியவான்கள் உண்டா?

ஐடியா ஐயாச்சாமி

மறுபடியும் தங்க வேட்டையை ஒட்டிய பதிவு. அன்பே சிவம் பார்த்து நிறைய பேர் பாதிக்கப்பட்டு விட்டனர். நாமும் அதேயே ஏன் பிடித்துக் கொள்வானேன் என்று தான் எனக்கு மிகவும் 'பிடித்த' தங்கவேட்டையை மறுபடி பிடித்துத் தொங்கப்போகிறேன்.

சன் டிவியின் தக தக தக தக தங்க வேட்டையில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி.

"கோமாளிகளையும் பல விதமான விலங்குகளையும் வைத்து நடத்தப்படும் காட்சி எது"

கொடுக்கப்பட்ட விடை: சர்க்கஸ்.

'ஐடியா ஐயாச்சாமி'யின் பதில்: சட்டமன்றம்.

சன்டிவி தவற விட்ட வாய்ப்பை, ஒருவேளை ஆட்சி மாறினால், ஜெயா டிவி பயன்படுத்திக் கொள்ளுமா?

2006/02/18

லண்டன் எங்கே இருக்கிறது?

நேற்று தான் நம்ம சிம்பு நடித்த 'சரவணா' படம் பார்த்தேன். படம் எப்படி இருக்கிறது என்று எல்லாருக்கும் இந்நேரம் தெரிந்திருக்கும். எனவே அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை.

அப்படத்தில், ஜோதிகா லண்டனில் படிக்கிறார்களாம். அப்போது தனது அண்ணனுக்கு அங்கு இருப்பதை வீடியோ படம் எடுத்து அனுப்புகிறார்கள். இதில் என்னப்பா என்கிறீர்களா? அங்கே தான் விஷயம்.

அதில் லண்டனாக காண்பிப்பதில் ஒரு காட்சி இங்கே துபாயை. இங்கே இருக்கும் ஷேக் சாயத் நெடுஞ்சாலையையும் காண்பித்து, அதுவும் லண்டன் என்கிறார்கள். துபாய்க்கே திர்ஹாமா? (அல்லது ஒட்டகம், பாலைவனம் எது வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்).

இது தமிழ் சினிமாவில் இன்று நேற்றல்ல. ரொம்ப காலமாக நடக்கிறது என்று சமீபத்தில் மலேசியா போனபோது தான் தெரிந்தது. அங்கே நான் சென்ற பூங்கா, ப்ரியா படத்தில் சிங்கப்பூராக காண்பிக்கப்பட்டது.

அன்றே S.P. முத்துராமன் ஆரம்பித்து வைத்தார். இன்று ரவிக்குமார் தொடர்கிறார். தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாருமா அங்கே சென்று பார்க்கப்போகிறார்கல் என்ற எண்ணம்?

அந்தக்காலத்திற்கு வேண்டுமானால் அது ஒத்து வந்திருக்கலாம். இப்போது தான் தமிழர்கள் எல்லா ஊரிலும் இருக்கிறார்களே? சுற்றுப்பயணம் சென்று பார்ப்பவர்களும் நிறைய் இருக்கிறார்களே. கொஞ்சம் பார்த்து செய்ய்லாம் இல்லையா?

யாராவது லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்று, ஷேக் சாயது சாலையை கேட்டுத்தொலைக்காதீர்கள், என்ன?

2006/02/16

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

சூரிய ஒளி நமது முடியை வெளுப்பாக்குகிறது, ஆனால் தோலை கருப்பாக்குகிறது. ஏன்?

பெண்களால் வாயை மூடிக்கொண்டு மஸ்காரா இடமுடியாது. ஏன்? (உண்மையா?)

"Abbreviated" இவ்வளவு பெரிய வார்த்தை. ஏன்?

மருத்துவார்கள் தனது சிகிச்சையை 'பயிற்சி' என்கிறார்கள். ஏன்?

எலுமிச்சை ரசம் பெரும்பாலும் செயற்கையான சுவையால் செய்யப்படுகிறது. ஆனால் பாத்திரம் கழுவும் திரவமோ, உண்மையான எலுமிச்சை ரசத்தால் செய்யப்படுகிறது. ஏன்?

பூனை உணவில் 'எலி-சுவை'யான உணவு கிடையாது. ஏன்?

குற்றவாளிகளை கொல்ல பயன்படுத்தும் ஊசிகளை சுத்தப்படுத்துகிறார்கள் (sterilize) - ஏன்?


நன்றி - மெயில் அனுப்பிய நண்பி

2006/02/15

தமிழ்மணம் மற்றும் 'பெனாத்தல்'லுக்கு நன்றி

நானும் ஒருவழியாக தமிழ்மணத்தில் சேர்ந்து விட்டேன்.

இனிமேல் முயற்சி எடுக்க கூடாது என்று தான் மனம் தளர்ந்து போயிருந்தேன். பெனாத்தல் உதவியுடன் இன்று தமிழ்மணத்தில் என் இடுகையும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.


நன்றிகள் பல...

துபாய்வாசி

2006/02/14

கிரிக்கெட்டில் சில புதிய யோசனைகள்

சமீப காலத்தில் ஒரு நாள் ஆட்டங்களில் ஐ.சி.சி. (ICC) பல புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. அவை நிறைய கவர்ச்சியையும் விறுவிறுப்பையும் ஆட்டத்தில் தந்துள்ளது என்பது உண்மை.

எனக்கு தோன்றிய சில யோசனைகள்:

1) ஒரு காலத்தில், No-ball மற்றும் Wide உதிரி (extra) ரன் கிடையாது. அதாவது, அந்த பந்தில் ரன் எடுத்தால் No-ball'க்குரிய ஒரு ரன் அதிகமாக கிடைக்காது. ஆனால், இப்பொச்ழுது அப்படி இல்லை. No-ball'லில் ஒரு ரன் எடுத்தால் மற்றும் எடுத்த ரன் இரண்டுக்கும் சேர்த்து மொத்தம் இரண்டு ரன் கிடைக்கும். இதே போலத்தான் Wide ballலில் ஒரு ரன் எடுத்தால் (mostly bye run) , wide ball மற்றும் அந்த bye ரன் இரண்டும் சேர்த்து மொத்தம் இரண்டு.

ஆனால் இந்த விதிமுறை முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை என்பது எனது கருத்து. ஏன் கூறுகிறேன் என்றால், ஒரு வேளை ஒரு No ball, wide பாலாக வீசப்பட்டது என வைத்துக்கொள்வோம். அதற்கு No ball மட்டுமே ஒரு ரன்னாக அளிக்கப்படுகிறது. இது சரியில்லை தானே?

மேற்கண்ட விதியின் படி No ball மற்றும் wide ball இரண்டுக்கும் சேர்ந்து 2 ரன்கள் அல்லவா அளிக்கப்பட வேண்டும்?

இப்படி அளித்தால் தான் சரியாக இருக்குமென்பது எனது யோசனை.

2) இந்தியா பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் போட்டிகிளின் போது ஆடுகளத்தினைப்பற்றி எழுந்த சர்ச்சை யாரும் அவ்வளவு சீகிரமாக மறந்து இருக்க மாட்டார்கள். ICC'க்கு இதற்கும் ஒரு யோசனை.

ஒரு அணி தனது சொந்த நாட்டில் ஆடுவதே அதற்கு மிக பெரிய பலம். பழகிய சூழ்நிலை, சீதோஷணம், மற்றும் சொந்த நாட்டு ரசிகர்கள். இது போதாதென்று, அவர்க்களுக்கு ஏற்றார்போல ஆடுகளமுமா?

ICC ஆடுகளத்தினை அமைப்பதற்காக ஏன் நடுநிலையான நிபுணர்களை நியமிக்கக்கூடாது? நடுவர்களை நியமிப்பது போல? இப்படி ஆடுகளம் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு ஆட்டமும் விறுவிறுப்பானதாக இருக்குமே?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

2006/02/12

குட்ட குட்ட குனியும் ....

இந்தியா கடைசியில் இந்த தொடரில் முதல் வெற்றியை பெற்றது. இந்த வெற்றி ஒரு நிறைவான
வெற்றியாகும். இந்த தொடரில் எப்பொழுதும் சோடை போகும் நமது
பந்து வீச்சாளர்களின் நல்ல முயற்சியே இதற்கு காரணம்.

இந்த போட்டியிலும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் நடைபெற்றது.
ஷோயப் மாலிக் ரன் எடுக்க முயன்ற போது, தான் ஆட்டமிழக்க நேரிடும்
எனத் தெரிந்தவுடன், காலால் பந்தினை உதைத்து தன்னை தப்பிக்க
வைத்துக்கொண்டார். அதற்கப்புறம் அவர் மேலும் 47 ரன்களை
எடுத்தார். போட்டியின் 'நியாயம்' என ஒன்று இருக்கிறதல்லவா? சதம்
அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தார். வேறு எப்படி? அதே ரன் அவுட்
தான். அரசன் அன்று கொல்வான்.... என்ற ஒரு பழமொழி தான்
ஞாபகத்திற்கு வருகிறது.

எனது கேள்வி இது தான். ஏன் இந்தியர்கள் இந்த நிகழ்வுக்கு நடுவரிடம்
அவுட் கோரவில்லை? போன ஆட்டத்தில் நடந்த விஷயத்தினால் எழுந்த
சர்ச்சையினாலா? அப்படியானால் இனி மேல் பாகிஸ்தானுக்கு எதிராக
எப்போதுமே இப்படித் தான் 'எது நடந்தாலும்' எதுவே செய்ய
மாட்டார்களா? இதனால் இந்தியாவிற்குத் தான் தோல்வி, இன்சமாமுக்கு
வெற்றி.

இந்தியர்களின் சுபாவம் அறிந்து தான் இன்சமாம் இப்படி கூறியிருந்தார்
எனவே சொல்லலாம். அவர் எதிர்பார்த்தது போலவே, இந்தியாவும்
வளைந்து கொடுத்து விட்டது.

நமக்கு எதிராக ஒருவர் குறை கூறுகிறார் எனில், நமக்கு ஏன் எதிர்த்து
போராட தோன்றவில்லை (இது ஒரு குறையோ குற்றமோ இல்லை, ஆட்ட
விதிகளுக்கு உட்பட்ட விஷயம். எனினும்......?).

குட்ட குட்ட குனியும் குணம் நமக்கு எப்போது தான் போகுமோ?

2006/02/10

கடியின் வலி

எல்லோரும் இப்போது "கடிக்கும்" வேலையை செவ்வனே செய்து
வருக்கிறார்கள். அதைப் பார்த்து எனக்கு வந்த மலரும் நினைவுகள்....

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம். அனைவரும்
கல்விச்சுற்றுலா சென்றிருந்தோம். நாங்கள் படித்தது விலங்கியல்
என்பதால் அது உண்மையான கல்விச்சுற்றுலாவாகத் தான் இருந்தது.

ஒரு 8 நாள் பயணத்தினை முடித்துக்கொண்டு அனைவரும் West-Coast
விரைவு வண்டியில் திரும்ப வந்துகொண்டிருந்தோம். எனது நண்பனுக்கு
(மற்ற அனைவரைப்போலவே) மிகவும் போரடித்தது. வண்டி ஒவ்வொரு
நிலையத்திலும் நின்று நின்று வந்துகொண்டிருந்தது. அவன் என்னை
நோக்கி 'வண்டி அடுத்தது எங்கேடா நிற்கும்' எனக்கேட்டான் (என்னவோ
எனக்கு எல்லாம் தெரியும் என்பது போல).

எனக்கு இருந்த கடுப்பில், என்னால் தாங்க முடியவில்லை. அவனிடம்
சொன்னேன், 'டேய், கவலைப்படாதே, கண்டிப்பாக எப்படி இருந்தாலும்,
தண்டவாளத்தில் தான் நிற்கும்' என ரொம்ப அப்பாவி மாதிரி
சொன்னேன். அவன், என்னை ஒரு பார்வை பார்த்தான்.

அவ்வளவு தான், என்னை சரியாக உதைக்கப்போகிறான் என
நினைத்தேன். அவன் ஓன்றுமே சொல்லாமல் பக்கத்து compartment
சென்று விட்டான். சிறிது நேரத்தில் எனது வகுப்பின் 'தாதா'வான ஒரு
பையனுடன் வந்தான். தாதா வந்து 'எவன்டா அவன், வண்டி
தண்டவாளத்தில் நிற்கும் என கடிப்பது? மவனே இன்னொரு தடவை
இப்படி கடிச்சே, அவ்வளவு தான். வண்டியிலிருந்து தூக்கி வீசிவிடுவேன்'
என பயமுறுத்தினான்.

அப்போது தான் எனக்கு தெரிந்தது, என் நண்பன் எனது கடியினால்
எவ்வளவு வலி பட்டிருந்தான் என. எனக்கு சிரித்து சிரித்து கண்ணில்
தண்ணீரே வந்து விட்டது.

எனது மிகச்சிறந்த 'கடி' இதுவே என (இதுவரை) பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறேன்.

2006/02/08

Burj Al Arab



இந்த ஊரில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் புகழ் பெற்ற புர்ஜ் அல் அராப் ஓட்டல்.

கருவிப்பட்டை

நான் மற்றும் விதிவிலக்கா என்ன?

எனக்கும் கருவிப்பட்டையினை நிறுவுவது பற்றி தெரியவில்லை. சீக்கிரம் தெரிந்துகொள்வேன் என்ற நம்பிக்கையுடன்.....

விரைவில் கருவிப்பட்டையுடன் சந்திக்கிறேன்!

ஒரு சந்தேகம்!

இன்சமாம் உல் அக் இன்று அளித்துள்ள பேட்டியில் அவரது ரன் - அவுட் ஆட்டத்தின் மரியாதையையே கெடுத்துவிட்டதாகவும், இந்தியா இப்படி செய்யும் என எதிர்பார்க்கவே இல்லை எனவும் கூறியிருக்கிறார் (http://usa.cricinfo.com/pakvind/content/current/story/236128.html).

இந்தியா எப்பொழுதும் விட்டு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டுமென நினைத்தாரோ?

அல்லது

கொல்கத்தாவில் நடந்த ஆசிய கோப்பை டெஸ்ட் போட்டியின் போது, ஷோயப் அக்தர் சச்சின் ஓட்டம் எடுக்க முயன்ற போது, தவறுதலாக (என நம்புவோமாக), அவரைத் தடுத்த போது, அப்பீல் செய்யாமல் தான் இருந்தார்களா அவர்கள்?

அவர்களுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயமா? என்ன ஐயா இது ஒரு தமாசு?